ஐபிஎல் 2014 பிளே-ஆஃப்
2014 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பிளே-ஆஃப் சுற்றில் மோதின. அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கும் என்ற நிலை இருந்தது.
சேவாக் அதிரடி
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணிக்கு அதிரடி துவக்கம் அளித்தார் வீரேந்தர் சேவாக். அவர் சிக்ஸ், ஃபோர் என தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடி மிரட்டினார். 58 பந்துகளில் 122 ரன்கள் குவித்தார்.
பஞ்சாப் ரன் குவிப்பு
டேவிட் மில்லர் 19 பந்துகளில் 38 ரன்கள் குவித்திருக்க, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் நிலை பரிதாபமாக இருந்தது. சிஎஸ்கே அணிக்கு 227 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
சென்னை அணிக்கு ஏமாற்றம்
சிஎஸ்கே அணிக்கு துவக்கம் அளித்த டிவைன் ஸ்மித் 7, பாப் டுபிளெசிஸ் டக் அவுட் ஆகி பெரிய ஏமாற்றத்தை அளித்தனர். ஆனால், மூன்றாவதாக பேட்டிங் ஆட வந்த சுரேஷ் ரெய்னா அதிரடி ஆட்டம் ஆடினார். பவர் பிளே ஓவர்களில் அவர் ஆடிய ஆட்டம் இன்று வரை மறக்க முடியாத ஒன்றாகும்.
ரெய்னா அதிரடி ஆட்டம்
முதல் ஆறு ஓவர்கள் வரையுமே களத்தில் இருந்த ரெய்னா 25 பந்துகளை சந்தித்தார். அதில் 6 சிக்ஸ், 12 ஃபோர் என அடித்த அவர் 87 ரன்கள் குவித்தார். அப்போது சிஎஸ்கே அணிதான் வெற்றி பெறும் என ரசிகர்கள் பலரும் எண்ணினர்.
6 ஓவரில் 100 ரன்
6 ஓவரில் சிஎஸ்கே அணி 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்தது. சரியாக ஏழாவது ஓவரின் முதல் பந்தில் சுரேஷ் ரெய்னா ரன் அவுட் ஆனார். பிரெண்டன் மெக்குல்லம் ரன் ஓட அழைத்தார். அதை ஏற்று ஓடிய ரெய்னா ரன் அவுட் செய்யப்பட்டார்.
சரிவு
அத்துடன் சிஎஸ்கே அணி சரியத் துவங்கியது. மெக்குல்லம் 11, ஜடேஜா 27, டேவிட் ஹஸ்ஸி 1 என வரிசையாக விக்கெட்டை இழந்தனர்.தோனி ஒரு புறம் அதிரடி ஆட்டம் ஆடி போராடினார். ஆனால், விக்கெட் சரிவால் இலக்கை நெருங்க முடியாமல் போனது.
சிஎஸ்கே தோல்வி
சிஎஸ்கே அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் சுற்றுடன் வெளியேறியது.
மறக்க முடியாத ஆட்டம்
அந்தப் போட்டியில் 16 பந்துகளில் அரைசதம் எட்டினார் ரெய்னா. சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தாலும், சேவாக் சில நிமிடங்கள் முன்பு அடித்த அதிரடி சதத்தை மறக்க வைக்கும் அளவுக்கு அதிரடி ஆட்டம் ஆடிய ரெய்னாவை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இன்றளவும் ஐபிஎல் தொடரின் மறக்க முடியாத இன்னிங்க்ஸ்களில் இந்த ஆட்டமும் இடம் பெற்று வருகிறது.