மும்பை: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் 11வது சீசனில் சாம்பியனாகப் போவது யார் என்பதற்கான போட்டிகள் இன்று முதல் துவங்குகின்றன.
இன்னும் சற்று நேரத்தில் நடக்க உள்ள ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன.
காவிரிப் பிரச்னையை உலக நாடுகளின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் சென்னையில் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை யாரும் நேரில் சென்று பார்க்க வேண்டாம் என்று ஒரு கருத்து கூறப்பட்டு வருகிறது. இதில் இருந்து ஐபிஎல் போட்டி எந்த அளவுக்கு பிரபலமானது என்பது அனைவருக்கும் தெரியும்.
10 சீசன்களைக் கடந்தும், ஐபிஎல் மீதான எதிர்பார்ப்பு, வரவேற்பு சற்றும் குறையவில்லை. இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் திரும்புவதால், 11வது சீசனுக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கோல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் என 8 அணிகள் விளையாட உள்ளன. மொத்தம் 51 நாட்களில், 8 நகரங்களில், 60 போட்டிகள் நடக்க உள்ளன.
இந்த சீசனுக்கான முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் சற்று நேரத்தில் விளையாட உள்ளன. இதுவரை நடந்துள்ள 10 சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அதிகபட்சம் 3 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ், கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தலா 2
முறையும், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தலா ஒரு முறையும் பட்டம் வென்றுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமே தொடர்ந்து 2 முறை பட்டம் வென்றுள்ளது. 2008ல் ராஜஸ்தான் ராயல்ஸ், 2009ல் டெக்கான் சார்ஜர்ஸ், 2010ல் சென்னை சூப்பர் கிங்ஸ், 2011ல் சென்னை சூப்பர் கிங்ஸ், 2012ல் கோல்கத்தா நைட் ரைடர்ஸ், 2013ல் மும்பை இந்தியன்ஸ், 2014ல் கோல்கத்தா நைட் ரைடர்ஸ், 2015ல் மும்பை இந்தியன்ஸ், 2016ல் சன் ரைசர்ஸ் ஐதராபாத், 2017ல் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றன.
2018ல் யார் சாம்பியன் பட்டத்தை வெல்லப் போகிறார்கள் என்பதற்கு, மே 27ம் தேதி வரை காத்திருக்கவும்.