5 அணிகள்
இதில் மகளிர் ஐபிஎல் தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்று மற்ற அணிகளுடன் ரவுன்ட் - ராபின் முறையில் தலா இரு போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. லீக் முடிவில் முதல் இடம் பிடிக்கும் அணி, நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் விளையாடும். அதில் வெற்றிபெறும் அணி இறுதிக்குள் நுழையும். இவ்வாறு மகளிர் ஐபிஎல் தொடர் திட்டமிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வீராங்கனைகள்
அதேபோல் மகளிர் ஐபிஎல் தொடரில் 20 லீக் உட்பட மொத்தம் 23 போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு அணியும் 18 வீராங்கனைகளை ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்றும், அதிகபட்சமாக 6 வெளிநாட்டு வீராங்கனைகள் அங்கம் வகிக்க அனுமதி இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், போட்டியில் விளையாடும் லெவனில் 5 வெளிநாட்டு வீராங்கனைகள் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஹர்மன்பிரீத் கவுர் கருத்து
இதனிடையே மகளிர் ஐபிஎல் குறித்து பேச்சுகள் அதிகரித்து வரும் நிலையில், மகளிர் ஐபிஎல் தொடர் இந்திய அணிக்கும், உள்ளூர் வீராங்கனைகளுக்குமான இடைவெளியை குறைக்கும் என்று இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் தெரிவித்துள்ளார். மகளிர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க அதிக ஆர்வத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்தில் ஐபிஎல்
இந்த நிலையில் மகளிர் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள தேதி முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் மகளிர் ஐபிஎல் தொடர் மார்ச் 7ம் தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதியோடு முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக டிசம்பர் இறுதியில் மகளிர் ஐபிஎல் தொடருக்கான ஒளிபரப்பு உரிமம் ஏலம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஜனவரி மாதத்தில் மகளிர் ஐபிஎல் ஏலம் நடக்கும் என்று கூறப்படுகிறது.