டெல்லி : பிரதமர் மோடி ஃபிட் இந்தியா இயக்கத்தை தொடங்கி வைத்து உடற்தகுதி நம் கலாசாரத்தின் ஒரு முக்கிய அங்கம் என்று குறிப்பிட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29 அன்று தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை செய்த வீரர், வீராங்கனைகளுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது, தியான் சந்த் விருது, துரோணாச்சாரியார் விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படும்.
இந்த ஆண்டு அதற்கான விழா டெல்லியில் நடைபெற்றது. அந்த விழாவில் ஏராளமான மக்கள் முன்னிலையில் ஃபிட் இந்தியா என்ற புதிய இயக்கத்தை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி.
விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர். இவர்கள் யோகா செய்தனர். மேலும், ஃபிட் இந்தியா இயக்கத்தை வலியுறுத்தி கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
ஃபிட் இந்தியா இயக்கத்தை துவங்கி வைத்த பிரதமர் மோடி, "உடற்தகுதி நம் கலாச்சாரத்தில் முக்கியமான அங்கம். சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை ஒரு சராசரி மனிதன் 8 முதல் 10 கிலோமீட்டர் வரை நடப்பார், ஓடுவார், மிதிவண்டி ஓட்டுவார். ஆனால், இப்போது தொழில்நுட்பம் வளர்ந்த பின் உடல் உழைப்பு குறைந்து விட்டது. நாம் குறைவாக நடக்கிறோம். அந்த தொழில்நுட்பமே நாம் தேவையான அளவு நடக்கவில்லை என கூறுகிறது" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் "உடல் உறுதியை பேணிக் காப்போம்" என உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். ஏற்கனவே, சில ஆண்டுகள் முன்பு யோகா தினத்தை தொடங்கி வைத்த மோடி, அதன் அடுத்த கட்டமாக பிட்இந்தியா இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளார்.