டெல்லி : 2020ஆம் ஆண்டுக்கான கேல் ரத்னா, அர்ஜுனா உள்ளிட்ட விளையாட்டு விருதுகளை வழங்கினார் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.
ஆகஸ்ட் 29 அன்று ஹாக்கி ஜாம்பவான் தியான் சந்த் நினைவு தினம் ஆகும். அந்த நாள் இந்தியாவில் விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் சிறந்து விளங்கும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
2020 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக காணொளி முறையில் நடைபெற்றது.
எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஐந்து பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. அதில் ரோஹித் சர்மா ஐபிஎல் தொடருக்காக அபுதாபியில் இருப்பதாலும், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருப்பதால் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட்-உம் பங்கேற்கவில்லை.
தமிழகத்தை சேர்ந்த பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலு, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா, ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.
அடானு தாஸ், டுட்டீ சந்த், சிராக் சந்திரசேகர், இஷாந்த் சர்மா, தீப்தி சர்மா, மனு பாக்கர் உள்ளிட்ட 27 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
ஒன்பது பேருக்கு சிறந்த பயிற்சியாளர்களுக்கான வாழ்நாள் சாதனையாளர் துரோணாச்சாரியா விருது வழங்கப்பட்டது. விளையாட்டுக்காக தங்களை அர்ப்பணித்த 15 பேருக்கு தியான் சந்த் விருது வழங்கப்பட்டது.
விழாவின் முடிவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருது வென்ற வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு அமைப்புகளுக்கு வாழ்த்து கூறினார். கேல் ரத்னா விருது வென்ற ஐவரில் மூவர் பெண்கள் என்பதை நாட்டுக்கு கிடைத்த பெருமையாக குறிப்பிட்டார்.