டர்பன்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து வெய்ன் பிராவோ, பொல்லார்ட் ஆகிய அதிரடி, ஆல்ரவுண்டர்கள் நீக்கப்பட்டு இருப்பது பழிவாங்கும் நடவடிக்கையாகும் என்று கிறிஸ் கெய்ல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
11வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டது.
ஆனால், ஆல்-ரவுண்டர்களான வெய்ன் பிராவோ, பொல்லார்ட் ஆகியோருக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை. கடந்த அக்டோபர் மாதத்தில் நடந்த இந்திய சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட சம்பள பிரச்சினை காரணமாக வெய்ன் பிராவோ தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை பாதியில் ரத்து செய்து விட்டு நாடு திரும்பியதால் ஏற்பட்ட இழப்புக்கு இந்திய கிரிக்கெட் வாரியம், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திடம் நஷ்ட ஈடு கேட்டதுடன், உறவையும் துண்டித்து கொண்டது. இந்த பிரச்சினை காரணமாகவே பிராவோ, பொல்லார்ட் பழிவாங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து வெய்ன் பிராவோ, பொல்லார்ட் ஆகியோர் நீக்கப்பட்டு இருப்பதற்கு அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கெய்ல் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சிறந்த ஆல்-ரவுண்டர்களான வெய்ன் பிராவோ, பொல்லார்ட் இருவரும் வேண்டுமேன்றே தேர்வு குழுவினரால் பழிவாங்கப்பட்டுள்ளனர். இருவரும் அணியில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளனர். எங்களால் அவர்களுக்காக பேச முடியும். உணர்ச்சிகளை வெளிக்காட்ட இயலும். அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டதால் வேறு என்ன செய்ய முடியும். இது ஒரு மோசமான நடவடிக்கையாகும். இதனால் நாங்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி இருக்கிறோம்.
பிராவோ, பொல்லார்ட் இல்லாமல் எங்கள் அணி வலுவானதாக இருக்காது. முக்கியமான இரு வீரர்களும் இல்லாதது எங்கள் அணிக்கு பெருத்த பின்னடைவாகும். இது ஒரு மோசமான தேர்வு என்று சொல்ல முடியும். இவ்வாறு கெய்ல் கூறினார். இதனிடையே, கெய்ல் ஆதரவு அளித்துள்ளதற்கு, பிராவோ மற்றும் பொல்லார்ட் இருவரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.