துணை கேப்டன் யார்?
ஆம் இந்திய டி20 அணியின் துணை கேப்டன் யார் என்பதே ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வி. முதலில் கேப்டன் யார் என்பதிலேயே இன்னும் தெளிவான எந்த முடிவும் இல்லை. ரோஹித் தான் அடுத்த கேப்டன் என்று யூகங்கள் அடிப்படையில் தான் விவாதிக்கப்பட்டு வருகின்றது. இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. அப்படி ஒருவேளை ரோஹித் கேப்டன் ஆகிறார் என்றால், இந்திய அணியின் ஃபியூச்சர் பிளான் என்ன என்பது நமது அடுத்த கேள்வியாக உள்ளது. ஏனெனில், ரோஹித்தின் வயது 34. இப்போது தான் அவர் கேப்டனாகிறார். அவர் திறமையில் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், 34 வயதில் கேப்டன் ஆகிறார் என்றால், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அவர் கேப்டனாக பணியாற்றப் போகிறார்?
சிரமப்படும் ரோஹித்
இப்போது ரோஹித்தின் உடல்தகுதியை பார்த்தால், இன்னும் 2 வருடம் அவர் கிரிக்கெட்டில் தாக்குப்பிடிப்பதே பெரிய விஷயம் எனலாம், இப்போதே 80 கிலோ இருப்பார் போல. அவர் தனது ஃபிட்னஸை கவனிக்காமல் விட்டால், உடல் எடை கூடி கிரிக்கெட் விளையாடவே சிரமப்படுவர். டி20 கிரிக்கெட் என்றால், சிக்ஸர்கள் மட்டும் அடித்தால் பத்தாது. ஃபீல்டிங்கும் புயல் வேகத்தில் இருக்க வேண்டியது அவசியம். 20 ஓவர்களும் ஸ்லிப்பில் நின்று கொண்டு ஒப்பேற்றிவிட முடியாது. அதற்கான களம் இது கிடையாது.
அணிக்கு என்ன லாபம்?
இவையெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால், ரோஹித் சிறப்பாக கேப்டன்சி செய்தாலும், இன்னும் 2 வருடங்கள் விளையாடலாம். அவ்வளவே. அப்படியெனில், 2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்திய அணி கேப்டனை மாற்றப் போகிறதா? ஜஸ்ட் ஒன்றிரண்டு வருடங்கள் மட்டும் ஒருவர் கேப்டனாக பணிபுரிவதால் அணிக்கு என்ன லாபம்? தொலைநோக்கு பார்வையில் இது அணிக்கு பயன் தருமா? என்பது போன்ற பல கேள்விகள் எழுவதை தடுக்க முடியாது.
புதிய துணை கேப்டன்
இந்நிலையில், இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், துணை கேப்டனாக லோகேஷ் ராகுலை நியமிக்கலாம் என்று ஆலோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தியா ஒரு புதிய கேப்டனை உருவாக்க விரும்பினால், நீங்கள் லோகேஷ் ராகுலை கன்சிடர் பண்ணலாம். அவர் நன்றாக விளையாடியுள்ளார். இப்போது கூட இங்கிலாந்தில், அவரது பேட்டிங் மிகவும் நன்றாக இருந்தது. ஐபிஎல் மற்றும் 50 ஓவர் கிரிக்கெட்டிலும் சர்வதேச அரங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரை துணை கேப்டனாக நியமிக்கலாம். அவர் ஐபிஎல்லில் மிகவும் ஈர்க்கக்கூடிய தலைமைத்துவ குணங்களை வெளிப்படுத்தினார். கேப்டன்சியின் சுமை தனது பேட்டிங்கை பாதிக்க அவர் விடவில்லை. எனவே, துணை கேப்டன்சிக்கு அவரது பெயரை கருத்தில் கொள்ளலாம்" என்று கூறியுள்ளார்.
இளம் இரத்தம் தேவையில்லையா?
ஆக, ரோஹித் தான் கேப்டன் என்று சுனில் கவாஸ்கர் முடிவே செய்துவிட்டார் போல!. ரசிகர்கள் ரோஹித் தான் அடுத்த கேப்டன் என்று கற்பனை செய்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால், இந்திய அணியின் லெஜண்ட்களில் ஒருவர், முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் போன்ற ஆளுமையும் இதே எண்ணத்தில் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை "Proud Mumbaikar" என்று நினைக்கிறாரோ என்னவோ! லோகேஷ் ராகுல் துணை கேப்டன் என்றால், கேப்டன் யார் சுனில் சார்? விராட் கோலி டி20 உலகக் கோப்பையை முடித்துக் கொடுத்த பிறகு தானே வெளியேறுகிறார்... அணியை ஏன் கோலியை விட 2 வயது சீனியர் ரோஹித்திடம் கொடுக்க வேண்டும்? அதற்கு பதில், ஒரு இளம் இரத்தத்திடம் அணியை ஒப்படைக்கலாமே. அடுத்த டி20 உலகக் கோப்பை தொடருக்குள் ராகுல் தலைமையிலான இளம் அணியை கட்டமைக்கலாமே!. சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ப்ரித்வி ஷா, சஞ்சு சாம்சன் என்று அணிக்குள் இளம் பிளட்ஸ்களை பாய்ச்ச வேண்டிய நேரம் இது கவாஸ்கர் சார். இதை நீங்கள் அல்லவா எங்களுக்கு சொல்ல வேண்டும்!