ஹைதராபாத்: ஐபிஎல் பைனலில் மும்பை அணியின் பேட்டிங் படு சொதப்பலாக இருந்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் அதுவே வெற்றிக்கு காரணமாக இருந்தது.
புனே அணிக்கு இதுதான் ஐபிஎல் தொடரின் கடைசி போட்டியாகும். அடுத்த சீசன் முதல் அந்த அணியும், குஜராத் அணியும் இருக்கப்போவதில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும் அடுத்த வருடம் முதல் ஆட உள்ளன.
இந்த நிலையில் புனே அணி சிறப்பாக பந்து வீசியது. அதேநேரம், மும்பை படு மோசமாக பேட் செய்தது. ஆட்டத்தின் முதல் பந்து முதலே ஒரு விதபதற்றத்தோடு ஆடி வந்தது மும்பை.
அந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் புனே அணியின் பந்து வீச்சும், ஃபீல்டிங்கும் இருந்தது. பார்த்திவ் பட்டேலை 3வது ஓவரின் முதல் பந்திலேயே அவுட்டாக்கினார் உனட்கட். அதே ஓவரில் சிம்மன்சை ஒரு கையால் கேட்ச் பிடித்து அவரே வெளியேற்றினார்.
அம்பட்டி ராயுடு சிறப்பாக பேட்டிங்கை தொடங்கிய நிலையில் புனே கேப்டன் ஸ்மித் அருமையாக அவரை ரன்அவுட் செய்து வெளியேற்றினார். இப்படி ஒருபக்கம் மும்பை பேட்டிங் சரிவடைந்த நிலையில், கேப்டன் ரோகித் ஷர்மாவும் பதற்றத்தோடு பேட் செய்தார். வழக்கமான அதிரடியை அவர் ஆடவில்லை.
அவர் பவுண்டரி லைனில் சிறப்பான ஒரு கேட்ச் மூலம் வெளியேற்றப்பட்டார். பொல்லாட் அதிரடி காட்ட தொடங்கிய நேரத்தில் 7 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மும்பை அணி இவரைத்தான் பெரிதாக நம்பியிருந்தது.
மும்பை பேட்டிங் சொதப்பலுக்கு ஒரே நிவாரணமாக இருந்தது க்ருணால் பாண்ட்யாதான். அதிரடி வீரரான இவரது சகோதரர் ஹர்திக் பாண்ட்யா கைவிட்ட போதிலும், இவர் ஒருமுனையில் நின்று, அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தும், தடுக்க வேண்டிய பந்துகளை அடித்தும் ஆடினார். 47 ரன்களை அவர் குவித்தார்.
அவர் மட்டும் தன்னம்பிக்கையோடு அந்த ரன்களை அடித்திராவிட்டால், மும்பை இன்னும் மோசமாக சுருண்டிருக்கும். க்ருணால் பாண்ட்யாவின் அந்த ஸ்கோர், 1 ரன் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்ல உதவியது.