மார்ச் 29ல் துவக்கம்
இந்தியாவின் அடையாளமாக மாறியுள்ள ஐபிஎல் தொடர், இந்த ஆண்டு அடுத்த மாதம் 29ம் தேதி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏலம் கடந்த் டிசம்பரில் நடைபெற்ற நிலையில், தங்களுக்கு தேவையான வீரர்களை ஐபிஎல்லின் ஒவ்வொரு அணியும்,இருப்புத்தொகைக்கு ஏற்ப ஏலத்தில் எடுத்துள்ளது.
பயிற்சி குறித்து ஆர்சிபி அறிவிப்பு
ஐபிஎல்லின் 13வது சீசன் தொடர் துவங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் அதற்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அனைத்து அணிகளுக்கும் முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வரும் மார்ச் 21ம் தேதி முதல் தங்களது அணியின் அனைத்து வீரர்களும் பயிற்சிகளில் ஈடுபடுவார்கள் என்று அறிவித்துள்ளது.
|
கிரிக்கெட் இயக்குநர் அறிவிப்பு
இந்த சீசனுக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பயிற்சி வரும் 21ம் தேதி துவங்கவுள்ளதாக அணியின் கிரிக்கெட் இயக்குநர் மைக் ஹெசன் தனது டிவிட்டர் பக்கத்தின்மூலம் தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் கிரிக்கெட் வீரர்களின் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகள் நிறைவு பெற்றுவிடும் என்பதால், வீரர்கள் அனைவரும் இந்த பயிற்சியில் பங்குபெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச வீரர்கள் ஏலம் எடுப்பு
கடந்த டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, தென்னாப்பிரிக்காவை சேர்ந்த கிறிஸ் மோரீஸ், டேல் ஸ்டெயின், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆரோன் பின்ச், கேன் ரிச்சர்ட்சன், ஜோசுவா பிலிப் உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் எடுத்தது. மேலும் அணியின் கேப்டன் விராட் கோலியும் இந்த அணிக்கு முக்கிய பங்களிப்பை இந்த ஆண்டு தருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கோப்பையை கைப்பற்றாத ஆர்சிபி
அணியில் சிறப்பான வீரர்களை கொண்டிருந்தாலும் இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் ஆர்சிபி அணி, கோப்பையை கைப்பற்றவில்லை. கடந்த 2016ல் இறுதிப்போட்டி வரை வந்து கோப்பையை கைவிட்ட ஆர்சிபி, கடந்த 2018 தொடரில் 6வது இடத்தை பிடித்தது. இந்நிலையில், இந்த சீசனில் கோப்பையை கைப்பற்ற இந்த அணி தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்சுடன் மோதல்
மார்ச் 29ம் தேதி ஐபிஎல் தொடர் துவங்கவுள்ள நிலையில், மார்ச் 31ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது முதல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதவுள்ளது. ஐபிஎல்லில் இதுவரை கோப்பையை கைப்பற்றாத ஆர்சிபி, அதிக விலை கொடுத்து ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகளின் முக்கிய வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ள நிலையில், இந்த சீசனில் மற்ற அணிகளுக்கு ஆர்சிபி அதிக நெருக்கடியை கொடுக்கும் என தெரிகிறது.