டெல்லி: இந்தியக் கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு பத்மஸ்ரீ விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய கால்பந்து கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
இந்தியக் கால்பந்து அணியின் கேப்டனான சுனில் சேத்ரி, 97 சர்வதேச போட்டிகளில் 56 கோல்கள் அடுத்துள்ளார். சர்வதேச அளவில் அதிக கோலடித்துள்ள இந்தியர் என்ற பெருமை அவருக்கு உள்ளது.
கடந்தாண்டு ஜூன் மாதத்தின்போது, கிர்கிஸ்தான் அணிக்கு எதிராக 54வது கோலை அடித்தார். அப்போது சர்வதேச அளவில் விளையாடி கொண்டிருக்கும் வீரர்களில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் வாய்னே ரூனியை பின்தள்ளி நான்காவது இடத்தைப் பிடித்தார். அமெரிக்காவின் கிளிண்ட் டெம்ப்ஸே, போர்ச்சுகல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி ஆகியோர் முதல் மூன்று இடங்களில் இருந்தனர்.
சர்வதேச அளவில் பார்வர்டு வீரர்களில் அதிக கோலடித்தவர்களில் மிகச் சிறந்த ஸ்டிரைக்கிங் ரேட்டை சேத்ரி வைத்துள்ளார். 33 வயதாகும் சேத்ரி, 2002ல் 18 வயதில் மோகன் பகான் அணிக்காக விளையாடத் துவங்கினார்.
2011ல் அர்ஜூனா விருது பெற்றுள்ள அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று இந்திய கால்பந்து கூட்டமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.