ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது
வருடா வருடம் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கான விருதுகள் ஜனாதிபதியால் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டிற்கு பெருமை தேடித் தரும் வகையில் தங்கள் விளையாட்டுக்களில் சாதித்த வீரர், வீராங்கனைகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.
தேர்வுக் குழு
இந்த ஆண்டு விருதுக்கான வீரர்களை தேர்வு செய்யும் குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக், முன்னாள் ஹாக்கி கேப்டன் சர்தார் சிங் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். அந்த குழு கேல் ரத்னா விருதுக்கு நான்கு பேரை பரிந்துரை செய்துள்ளது.
நால்வர்
அந்த நால்வர் கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா, பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு.
ரோஹித் சர்மா
இவர்களில் ரோஹித் சர்மா கடந்த 2019ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்து இருந்தார். 2019 உலகக்கோப்பை தொடரில் ஐந்து சதங்கள் அடித்து உலக சாதனை செய்தார். கிரிக்கெட் உலகில் தலைசிறந்த துவக்க வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார். அதன் காரணமாக அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வினேஷ் போகாட், மணிகா பத்ரா
வினேஷ் போகாட் 2018 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியிலும், காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார். மணிகா பத்ரா டேபிள் டென்னிஸில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல முக்கிய வெற்றிகளை பெற்றுள்ளார்.
மாரியப்பன் தங்கவேலு
சேலம் மாவட்டம் பெரியவடாகம்பட்டியை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 2016 ரியோ பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார். 2004க்குப் பின் பாராலிம்பிக் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் அவர்தான். அதன் காரணமாக அவருக்கு கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இருவருக்கு விருதா?
அர்ஜுனா விருது பல விளையாட்டுப் பிரிவுகளுக்கு வழங்கப்படும். கடந்த ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இரண்டு பேருக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் இருவருக்கு வழங்கப்படலாம். சில ஆண்டுகளில் மூன்று பேருக்கு கூட அளிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு மட்டும் நான்கு பேருக்கு அந்த விருது வழங்கப்பட்டது.
ரோஹித் சர்மா vs மாரியப்பன் தங்கவேலு
2020ஆம் ஆண்டு எத்தனை வீரர்களுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்படும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. மகளிர் பிரிவில் ஒருவருக்கும், ஆடவர் பிரிவில் ஒருவருக்கும் வழங்கப்பட்டால் ரோஹித் சர்மா, மாரியப்பன் தங்கவேலு இடையே போட்டி ஏற்படும்.